அழகுப் போட்டியில் கலந்துகொள்ள ஒட்டகங்களுக்குத் தடை

235
Advertisement

அழகுப் போட்டியில் கலந்துகொள்ள 40 ஒட்டகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மனிதர்களுக்கு அழகுப் போட்டி நடைபெறுவதுபோல ஒட்டகங்களுக்கும் அழகுப்போட்டியை சௌதி அரேபிய நாடு நடத்திவருகிறது.

கிங் அப்துல் அஜிஸ் என்னும் பெயரில் ஒவ்வோராண்டும் ஒட்டகத் திருவிழாவை அந்த நாடு நடத்துகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் கலந்துகொள்ள வைக்கப்படுகின்றன.

ஒட்டகத்தின் தலை, கழுத்து, கூம்பு, உடை, தோரணையான தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அழகான ஒட்டகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் அழகான ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 66 மில்லியன் டாலர் தொகை பரிசாக வழங்கப்படுகிறது.

இதற்காக ஒட்டகங்களின் உரிமையாளர்கள் அவற்றை ஆபரேஷன்மூலம் அழகுபடுத்துவதாகவும், தடைசெய்யப்பட்ட ஒருவகையான ஊசி செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒட்டகத்தின் உதடுகள் பெரியதாகவும், தலைகள் பெரியதாகத் தோன்றுவதாகவும், மூக்குகள் நீளமாக ஆவதாகவும் கருதப்படுகிறது.

இவைதவிர, தடைசெய்யப்பட்ட வேறுசில அழகு சாதனப்பொருட்களையும் ஒட்டக உரிமையாளர்கள் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து போட்டிக்கான நடுவர்கள், தடைசெய்யப்பட்ட ஊசி மற்றும் அழகுசாதனங்களைப் பயன்படுத்தியதற்காக 40 ஒட்டகங்களுக்கு இந்த அழகுப்போட்டியில் கலந்துகொள்ள தடைவிதித்துள்ளனர். இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.

ஒட்டக வளர்ப்பு பல மில்லியன் டாலர் வருமானம் தரும் தொழிலாக சௌதி அரேபியா முழுவதும் நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.