தமிழக வீரர் சாய் சுதர்சனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் – கேப்டன் சுப்மன் கில் நடுவே சண்டை வெடித்துள்ளதாகத் தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜூன் 20 தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் இல்லாமல் இந்திய அணி முதன்முறையாக அந்நிய மண்ணில் விளையாட இருக்கிறது.
இதனால் இந்த டெஸ்ட் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே உள்ளது. புதிய கேப்டன் கில் இங்கிலாந்து மண்ணில், இந்திய அணியை வழிநடத்த இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும். இந்தநிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சனால் கேப்டன் கில் – பயிற்சியாளர் கம்பீர் இடையில் சண்டை மூண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் டெஸ்டில் கேஎல் ராகுல் ஓபனராகவும், அவருடன் மற்றொரு வீரராக ஜெய்ஸ்வாலும் இறங்குவார் என்று தெரிகிறது. கேப்டன் கில் 4வது வீரராகவும், கருண் நாயர் 5வது வீரராகவும் களமிறங்க இருக்கின்றனர். இதனால் முக்கியமான 3வது இடத்தில், அபிமன்யூ ஈஸ்வரனை களமிறக்க கம்பீர் முடிவு செய்துள்ளாராம்.
ஆனால் சுப்மன் கில், 3வது இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சனை இறக்க வேண்டும் என்று அடம் பிடித்தாராம். IPL தொடரில் கில் கேப்டனாக இருக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் ஆடி வருகிறார். அதனால் அவரே 3வது இடத்திற்கு பொருத்தமானவர் என்பது கில்லின் எண்ணமாக உள்ளது.
இதன் காரணமாக கில் – கம்பீர் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது. அபிமன்யூ ஈஸ்வரன் இங்கிலாந்து A அணிக்கு எதிராக 2 அரை சதங்களை அடித்துள்ளார். அதேநேரம் IPL தொடர் காரணமாக சாய் சுதர்சனால் பயிற்சி போட்டியில் விளையாட முடியவில்லை.
இதனை சுட்டிக்காட்டி சாய் சுதர்சனை மாற்று வீரராக வைத்துக் கொள்ளலாம். அபிமன்யூ ஈஸ்வரனே 3வது வீரராக களமிறங்கட்டும் என்று, கம்பீர் ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டாராம். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லை கடைசிவரை மாற்று வீரராகவே இருப்பாரா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
எனவே கம்பீரின் இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா?, இல்லை பூமராங் போல அவருக்கு எதிராகவே திரும்புமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.