‘இப்தார் நோன்பு நிகழ்ச்சியை சீர்குலைத்த நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுன்னத் ஜமா-அத் அமைப்பின் மாநில பொருளாளர் செய்யது கவுஸ் அளித்துள்ள புகாரில் கடந்த, 7 ம் தேதி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடந்த, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் பங்கேற்றார். அப்போது, கொஞ்சமும் மனிதத்தன்மையே இல்லாமல், நோன்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள் மீது, பாதுகாவலர்கள் தாக்கி உள்ளனர்.
விஜய் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில், நோன்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ரவுடிகள், குடிகாரர்கள் பங்கேற்றது, முஸ்லிம்களை கேவலப்படுத்தியதாக, தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பு உணர்கிறது. இனியும் இதுபோன்ற அத்துமீறல் செயல்கள் நடக்காமல் இருக்க, விஜய் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.