இந்த 2025ம் ஆண்டை கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு ஆண்டாகவே அறிவித்து விடலாம் போல. கிளாஸன், நிக்கோலஸ் பூரன் என்று பிரபல வீரர்கள், அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து வருகின்றனர். கிளாஸனை விடவும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனின் ஓய்வு தான், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில் 29 வயதிலேயே T20, ஒருநாள், டெஸ்ட் என 3 வித பார்மெட்களில் இருந்தும் விலகுவதாக பூரன் அறிவித்து இருக்கிறார். பூரனின் இந்த முடிவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்கு வீரர்கள் – அணி நிர்வாகம் இடையே இணக்கமான சூழ்நிலை கிடையாது.
என்றாலும் பூரனின் இந்த முடிவுக்கு பணமே முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும் IPL, BBL போன்ற லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்று பூரன் அறிவித்துள்ளார். சொந்த நாட்டுக்காக ஆடும்போது, ஒரு போட்டிக்கு அவரின் சம்பளம் ஒன்றரை முதல் 2 லட்சமாக உள்ளது.
அதேநேரம் IPL தொடரில் அவருக்கு வழங்கப்படும் சம்பளம் 21 கோடி ரூபாய். அதாவது ஒவ்வொரு போட்டிக்கும் ரூபாய் 15 லட்சம் சம்பளமாகப் பெறுகிறார். இதுதவிர்த்து அதிக பவுண்டரிகள், ஸ்ட்ரைக் ரேட், மேன் ஆப் தி மேட்ச் என்று தனியாகவும் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறது.
இதனால் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிக்கேற்ப, பூரன் இந்த ஓய்வு முடிவினை எடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”இப்போ உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு நாட்டுப்பற்று ரொம்ப அதிகமா இருக்கு”, என்று, சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.