ஏர் இந்தியா புதிய தலைவர்

310
Advertisement

இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியா
நிறுவனத்தின் தலைவர் ஆக என். சந்திரசேகரன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

1932 ஆம் ஆண்டு ஜேஆர்டி டாடாவால் தொடங்கப்பட்ட
டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை பிரதமர் நேரு
தலைமையிலான மத்திய அரசு 1953 ஆம் ஆண்டு
அரசுடைமை ஆக்கியது.

அதன்பிறகு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு
சிறப்பாக இயங்கிவந்த அந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு
முதல் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நஷ்டத்தில்
இயங்கிவந்தது.

இந்த நிலையில், 68 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம்
ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஏலத்தின்மூலம் மறுபடியும்
டாடா வசம் வந்துள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமைச் செயல்
அதிகாரியாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச்
செயல் அதிகாரியான இல்கர் ஐசி பொறுப்பேற்க டாடா
நிறுவனம் அழைப்பு விடுத்தது. ஆனால், அவர் துருக்கி
நாட்டு அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி
இந்தியாவில் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதனால், ஏர்
இந்தியாவின் பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில்
பிறந்த என். சந்திரசேகரனை ஏர் இந்தியா நிறுவனத்தின்
தலைவராக டாடா நிறுவனம் நியமித்துள்ளது. திருச்சி ஆர்இசி
கல்லூரியில் பொறியியல் பட்டம்பெற்ற இவர் 1987 ஆம் ஆண்டு
டிசிஎஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

சந்திரசேகரன் ஏற்கெனவே 2017 ஆம் ஆண்டுமுதல் டாடா
சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்துவருகிறார்.
அதுமட்டுமன்றி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா
கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்சி
சர்வீசஸ், டாடா கெமிக்கல்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர்,
இந்தியன் ஹோட்டல் கம்பெனி ஆகிய நிறுவனங்களின்
தலைவராகவும் இருந்து வருகிறார்.

தமிழர் ஒருவர் மிகப்பெரிய நிறுவனத்தின் உயர்ந்த
பதவியில் நியமிக்கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் பெருமைதானே..