Monday, March 31, 2025

இறப்பு வீடுகளில் ஊடகங்களுக்கு அனுமதி தரக்கூடாது : தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு சங்கம்

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி ராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

பிரபலங்கள் துக்க நிகழ்வுகள் ஊடகங்களில் அதிகம் காட்டப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயல் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும்.

ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?

இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest news