ஐபிஎல் 2026 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோவை வீழ்த்தி ஒரு முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த கிங் கோலி, போட்டிக்குப் பிறகு வெளியிட்ட ஒரு தகவல், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியையும் மீறி, அவரது வார்த்தைகளில் ஒரு சோகம் இழையோடியது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 147 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, விராட் கோலி அபாரமாக ஆடினார். 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 49 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டார். நூழிழையில் அரைசதத்தைத் தவறவிட்டாலும், அவரது ஆட்டம் அணிக்குத் தேவையான உத்வேகத்தைக் கொடுத்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் பின்னால் ஒரு பெரும் வலி இருந்திருக்கிறது.
போட்டிக்குப் பிறகு பேசிய கோலி, “நான் இன்னும் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லை. கடந்த நான்கு, ஐந்து நாட்களாகவே என் உடல்நிலை சரியில்லை. முந்தைய போட்டியில் என் முழங்காலில் வலி ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு, எனது சிறந்த ஆட்டத்திற்குத் திரும்ப முயற்சித்து வருகிறேன்” என்று மனம்திறந்து பேசினார். முழு உடற்தகுதியுடன் இல்லாத நிலையிலும், அணிக்காக அவர் களமிறங்கிப் போராடியது, அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
மேலும், பெங்களூரு ஆடுகளம் வழக்கத்தை விட மெதுவாக இருந்ததால், பவர்பிளேவிலேயே அதிரடியாக ஆடி, போட்டியை எதிரணியிடம் இருந்து பறிக்கத் திட்டமிட்டதாகவும் அவர் விளக்கினார். உடல் வலியையும் பொருட்படுத்தாமல், அணியின் வெற்றிக்காக உழைத்த விராட் கோலியின் இந்த செயல், கிரிக்கெட் உலகில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
