Tuesday, September 2, 2025

டாலரின் ஆதிக்கம் முடிகிறதா? தங்கத்தை நோக்கி ஓடும் மத்திய வங்கிகள்! இது தான் காரணம்!

தங்கம், இது வெறும் ஒரு ஆபரணம் அல்ல. இது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரம். இப்போது, அந்தத் தங்கத்தின் பளபளப்புக்கு முன்னால், உலகின் சக்திவாய்ந்த கரன்சியான அமெரிக்க டாலரே மங்கத் தொடங்கியுள்ளது.

ஆம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், இப்போது அமெரிக்க டாலரை விட, தங்கத்தைத்தான் அதிகமாக நம்பத் தொடங்கியுள்ளன. 1996-ஆம் ஆண்டிற்குப் பிறகு, முதல் முறையாக, உலக நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பில், தங்கத்தின் பங்கு, அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களை விட அதிகமாகியுள்ளது.

ஒவ்வொரு நாடும், தன்னிடம் ஒரு பாதுகாப்புக் கருவூலத்தை வைத்திருக்கும். இதில், அமெரிக்க டாலர்கள், அரசாங்கப் பத்திரங்கள், மற்றும் தங்கம் ஆகியவை இருக்கும். ஆனால், சமீப காலமாக, அவர்கள் பத்திரங்களைக் குறைத்துவிட்டு, தங்கத்தை அதிகமாக வாங்கிச் சேர்த்து வருகிறார்கள்.

இது, உலகப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கலாம் என்று கிரெஸ்காட் கேபிடல் (Crescat Capital) நிறுவனத்தின் நிபுணர் டாவி கோஸ்டா (Tavi Costa) கூறுகிறார்.

மத்திய வங்கிகள் எவ்வளவு தங்கம் வாங்கியுள்ளன?

ஐரோப்பிய மத்திய வங்கியின் அறிக்கையின்படி, மத்திய வங்கிகளிடம் மொத்தம் 36,000 டன்னுக்கும் அதிகமான தங்கம் உள்ளது.

உலக தங்க கவுன்சிலின் (WGC) படி, 2022-ல் 1,082 டன், 2023-ல் 1,037 டன், மற்றும் 2024-ல் சாதனை அளவாக 1,180 டன் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கியுள்ளன. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில், அவர்களின் சராசரி கொள்முதல், ஆண்டுக்கு 400–500 டன்கள் மட்டும்தான்.

இப்போது, அந்நியச் செலாவணி கையிருப்பில், தங்கம் இரண்டாவது பெரிய சொத்தாக மாறியுள்ளது. அமெரிக்க டாலர், 46% பங்குடன் முதலிடத்தில் இருந்தாலும், தங்கம், யூரோவை முந்தி, 20% பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

திடீரென்று ஏன் இந்தத் தங்க மோகம்?

இதற்கு முக்கியக் காரணம், அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கை குறைந்து வருவதுதான். அமெரிக்காவின் கடன், தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. உலகில் போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்களுக்குத் தங்கம் மட்டுமே ஒரு பாதுகாப்பான புகலிடமாகத் தெரிகிறது. சர்வதேச நாணய நிதியமான IMF-மே, “டாலரின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது,” என்று கூறியுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

நமது ரிசர்வ் வங்கியும் (RBI), இந்தத் தங்க வேட்டையில் பின்தங்கவில்லை. மார்ச் 2025 வரை, ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்பை 880 டன்களாக அதிகரித்துள்ளது. இது, நமது மொத்தக் கையிருப்பில் 12 சதவிகிதமாகும். இது, இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த உதவுகிறது.

அப்போ, டாலரின் ஆதிக்கம் உண்மையிலேயே முடிந்துவிட்டதா?

இப்போதைக்கு, இல்லை. உலக இருப்புக்களில், டாலர் இன்னும் 58 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. தங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், டாலர்தான் இன்னும் வலிமையானது. ஆனால், உலக நாடுகள் தங்கத்தை நோக்கி நகர்வது, எதிர்காலத்தில் டாலரின் ஆதிக்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என்பதில் எந்தச சந்தேகமும் இல்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News