Gentleman விளையாட்டு எனப்படும் கிரிக்கெட், தற்போது குத்துச்சண்டை போட்டியாக மாறி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா – வங்கதேசம் இடையிலான போட்டியின்போது, களத்திலேயே வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் நான்கு நாள் டெஸ்ட் தொடரில் வங்கதேச இளம் அணியும், தென் ஆப்பிரிக்கா இளம் அணியும் விளையாடி வருகின்றன. முதல் போட்டி டிரா ஆனது. இதையடுத்து 2வது போட்டியில் இரு அணிகளும் விளையாடின.
தென் ஆப்பிரிக்கா பவுலர் ஷெபோ நுட்லி (Tshepo Ntuli) வீசிய பந்தில், வங்கதேச பேட்ஸ்மேன் ரிப்பன் மாண்டல் (Ripon Mondol) சிக்ஸர் அடித்தார். சிக்ஸர் அடித்ததும் ரிப்பன் (Ripon), ஷெபோவிடம் (Tshepo) சென்று வம்பிழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஷெபோ (Tshepo), ரிப்பானின் (Ripon) ஹெல்மெட்டில் 2 அடி அடித்தார்.
பதிலுக்கு ரிப்பன் (Ripon), ஷெபோவை (Tshepo) அடிக்கப் பாய்ந்தார். அதற்குள் நடுவர் கம்ருஸ்ஸாமன் (Kamruzzaman) மற்றும் சக வீரர்கள் தடுத்துப் பிரித்து விட்டனர். இல்லையெனில் இருவரும் மைதானத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டிருப்பர். இதையடுத்து கள நடுவர்கள் நடந்த சம்பவம் குறித்து, ICCயிடம் அறிக்கை சமர்ப்பித்து இருக்கின்றனர். விரைவில் ICC இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வீரருக்கு, சுமார் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.