Thursday, June 26, 2025

பும்ரா தப்பா? இதெல்லாம் ரகசியம் ! ‘கம்பீர்’-ஐ விளாசும் சோப்ரா,சாஸ்திரி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 371 ரன்களை பாதுகாக்க முடியாமல், ஐந்து விக்கெட்டுகளுக்கு தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்தும், இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்க முடியாமல் போனார். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா, பும்ரா தொடர்பான ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

தொடருக்கு முன்பே பும்ரா மூன்று அல்லது அதிகபட்சம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அறிவித்திருந்தனர். இதைத் தவறான முடிவாக ஆகாஷ் சோப்ரா கண்டிக்கிறார். பும்ரா எத்தனை போட்டிகளில் விளையாடப்போகிறார் என்பதை ஏன் முன்கூட்டியே உலகத்துக்கெல்லாம் தெரிவிக்கணும்? இது போன்ற தகவல்கள் ரகசியமாக வைத்திருந்தால் எதிரணி குழப்பத்தில் இருக்கும், அவர்கள் எதையும் திட்டமிட முடியாது என்பதுதான் அவரின் முக்கேள்வி.

இந்த தகவலை அறிவித்ததன் விளைவாக இங்கிலாந்து அணிக்கு பெரிய நன்மை கிடைத்துவிட்டது. பும்ரா எப்போது இல்லையோ அந்த போட்டிக்கேற்ப பிச்சுகளை உருவாக்க முடியும். அதனால் எதிரணி மனதளவில் நம்பிக்கையை பெற்றுவிடும். இந்த நிலைமை இந்திய அணிக்கே எதிரானதாக மாறிவிடும் என சோப்ரா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதேபோல இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பும்ராவை இரண்டாவது டெஸ்டில் ஓய்வெடுக்க வைப்பது குறித்து நல்லவிதமாக யோசிக்கச் சொல்கிறார். பும்ரா உலக நம்பர் ஒன் பவுலர், அவர் இப்போது ஓய்வெடுத்தால் தொடரை இழக்கும் அபாயம் இருக்கிறது என அவர் எச்சரிக்கிறார். பும்ரா இல்லாமல் இந்தியா 2-0 என பின்தள்ளப்பட்டால் மீண்டும் தொடரில் மீளவே முடியாது என்றார்.

இந்திய அணியின் வெற்றிக்காக பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் தொடருக்குள் இருக்கவேண்டும். அவரை எந்த போட்டிகளில் பயன்படுத்துவோம் என்பது அணிக்குள் ஒரு ரகசியமாக வைத்திருக்கவேண்டும். எதிரணிக்கு அதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து விட்டால், நம்முடைய அனைத்து திட்டங்களும் தோல்வியடையும் அபாயம் அதிகம். தற்போது அந்த விஷயம்தான் நடந்திருக்கிறது. தொடரின் முதல் போட்டியில் தோல்வி பெற்ற இந்தியா, பும்ராவை அடுத்த போட்டிகளில் பயன்படுத்துமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் இப்போது தவறுகளை திருத்தி, மீதமுள்ள போட்டிகளில் அட்டகாசமாக களமிறங்க வேண்டியது இந்திய அணியின் முக்கியச் சவாலாக இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news