பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியால், பாகிஸ்தான் அரண்டு போய் கிடக்கிறது. ராணுவ வலிமையில் சிறந்து விளங்கும் இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் அது அந்நாட்டு பொருளாதாரத்தை முற்றிலும் சீரழித்து விடும்.
இதனால் தான் பதிலுக்கு இந்தியா மீது தாக்குதல் நடத்தினாலும் கூட, மறுபுறம் வெள்ளைக்கொடியையும் ஏந்தி சமாதன முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தியா-பாகிஸ்தான் இரண்டுக்குமே அண்டை நாடான சீனா, இந்த போர் பதற்றத்தினை குறைக்க தீயாய் வேலை செய்து வருகிறது.
இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், ”இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பதுடன், இரண்டுமே சீனாவின் அண்டை நாடுகளும் ஆகும். பயங்கரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அதை சீனா எதிர்க்கிறது.
இரு நாடுகளும் அமைதியைப் பேணவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் செயல்களைத் தவிர்க்கவும் கேட்டுக் கொள்கிறோம்,” என்று பாசமாக தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவின் இந்த சமாதன முயற்சிக்கு பின் மிகப்பெரிய சுயநலம் அடங்கியுள்ளது.
கடந்த 2005 தொடங்கி 2024 வரையிலான இந்த 19 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது, சுமார் 68 பில்லியன் டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விடும்.
எனவே தான் சீனா இந்தியா மீது பாசமாக இருப்பது போல காட்டிக் கொண்டு, இந்த சமாதன தூதுவன் வேலையை மேற்கொண்டு வருகிறது. தெற்காசியாவில் பதற்றம் அதிகரித்தால் அது சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், நட்பு நாடாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.