தமிழ்நாடு அரசு, ரேஷன் அட்டை தொடர்பான நடைமுறைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு செய்யும்போது முதலில், அருகிலுள்ள டி.எஸ்.ஓ அலுவலகத்தில் சென்று ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். ஆதார் இணைப்பு செய்யப்படாதவர்களின் பெயர்கள் அட்டையிலிருந்து நீக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் பின், அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம், அட்டையின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாகப் புதுப்பிக்கப்படும்.
காமன் மேன் யூடியூப் சேனல் பகிர்ந்த தகவலின்படி, அரசு ரேஷன் பொருட்களைப் பெறுவோர் தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கிறார்களா, இல்லை வெளியூர், பிற மாநிலம் அல்லது வெளிநாடு சென்றுவிட்டார்களா என்பதையும் கண்காணித்து வருகிறது. தொடர்ச்சியாக பயன்பாடு இல்லாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பயனாளிகள் ரேஷன் அட்டையைச் சீராகப் பயன்படுத்தியும், சரியான தகவல்களுடன் புதுப்பித்தும் இருக்க வேண்டும்.
மேலும், 5 வயது நிறைவடைந்த குழந்தைகளின் பெயர்கள் கட்டாயமாக ரேஷன் அட்டையில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், குழந்தைகள் என்பதால் அவர்களின் கைரேகை பதிவு தேவையில்லை.
அரசின் விதிகளின்படி, ரேஷன் அட்டை புதுப்பிக்கப்படாவிட்டால், அட்டையிலுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக ரேஷன் அட்டை– ஆதார் இணைப்பு மற்றும் கைரேகை பதிவு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
