கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஷ்ரேயாஸ் அய்யர் இடையிலான பிரச்சினை, ‘கன்னித்தீவு’ போல நீண்டுகொண்டே செல்கிறது. நடுவில் புகுந்து BCCIயும்தன்னுடைய பங்குக்கு, Guest பெர்பாமன்ஸ் செய்து வருகிறது. இதற்கு மத்தியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து, ஷ்ரேயாஸ் நீக்கப்பட்டதற்கு கவுதம் கம்பீர் தான் காரணம் என்று தகவல்கள் அடிபட்டு வருகின்றன.
கொல்கத்தாவிற்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயாஸை விட்டுவிட்டு, கம்பீரை கொல்கத்தா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது தான் இதற்கு காரணம். இந்தநிலையில் முன்னாள் இந்திய வீரர் முஹம்மது கைஃப், ஷ்ரேயாஸ் விஷயத்தில் என்ன நடந்தது என்று பேசியிருக்கிறார்.
இதுகுறித்து தன்னுடைய Youtube சேனலில் கைஃப், ” சாய் சுதர்சன் நல்ல பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக ஷ்ரேயாஸை புறக்கணித்தது எந்தவகையில் நியாயம்? 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 550 ரன்கள், 2024 – 2025 ரஞ்சி தொடரில் 480 ரன்கள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் ஷ்ரேயாஸ் அடித்துள்ளார்.
நடப்பு IPL தொடரில் பஞ்சாப் அணிக்காக அவர் 515 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வளவு நல்ல பார்மில் இருந்தும்கூட அவருக்கு டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கவில்லை. கோப்பை வென்று கொடுத்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷ்ரேயாஸ் முதுகில் குத்தியது.
தற்போது BCCIயும் அதைத்தான் செய்து வருகிறது. ஆனால் ஷ்ரேயாஸோ, ” இதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வார்த்தை கூட நான் பேசமாட்டேன். சோகமாகவோ, வருத்தமாகவோ இருப்பதாக ஊடகங்களில் சொல்ல மாட்டேன்,” என்று கூறுகிறார்.
துரோகங்களில் இருந்து வெளியே வந்து, அமைதியாக தன்னுடைய பேட்டால் பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது மொத்த உலகமும் அவரை பெருமையாகப் பேசுகிறது. கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி பாயிண்ட் டேபிளில் பஞ்சாப் முதல் இடத்தை பிடிக்க, காரணமாகி இருக்கிறார்.
ஒரு Hero இதுபோன்று தான் இருக்க வேண்டும்,” என்று உண்மையை உரக்க ஊருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஷ்ரேயாஸ்க்கு ஆதரவாக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் BCCIயுடன், வரிந்துகட்டி சண்டை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.