தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று (ஆகஸ்ட் 8) மற்றும் நாளை (ஆகஸ்ட் 9) குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது eKYC பதிவை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில், விரல் ரேகை அடிப்படையிலான eKYC நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86 சதவீதம் eKYC பதிவு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளின் பதிவையும் 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இந்த இரண்டு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
இதுவரை கைரேகை பதிவு மூலம் eKYC செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களது ஆதார் இணைப்பு மற்றும் eKYC பணியை நிறைவு செய்ய இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
