கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
சூளகிரி காவல் நிலையத்தின் பின்புறம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார், இருசக்கர வாகனங்கள், லாரிகள் மற்றும் பிக்-அப் வாகனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று காவல் நிலையத்திற்கு அருகே கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ, அங்கிருந்த காய்ந்த புற்களின் மீது பரவியது.
தற்போது வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக, புற்களில் பற்றிய தீ மளமளவென அருகில் இருந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பரவியது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்டவை தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சூளகிரி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
