பாசிச கும்பல் பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்புவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது : சமூக வலைதளங்களில் இன்றயை தினம் அதிகம் பொய் செய்திகளும் வதந்திகளும் பரப்பி வருகிறார்கள். உண்மை எவ்வளவு வேகமாக செல்கிறதோ, பொய் செய்தி அதை விட மூன்று மடங்கு வேகமாக பரவுகிறது. இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.
தவறாக செய்திகள் போலவே வெறுப்பு பேச்சும் அதிகமாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வெறுப்பு பேச்சுகளால் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் தாக்குவது போன்று காணொளி வேகமாக பரவியது. உடனே வட மாநிலங்களில் உள்ள உயர் அதிகாரிகளை தமிழகத்திற்கு வரவழைத்து உண்மை நிலவரத்தை முதலமைச்சர் ஆராய செய்தார். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை முதலமைச்சர் உறுதி செய்தார் என அவர் பேசினார்.