நடப்பு IPL தொடரில் Play Off வாய்ப்பினை இழந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை அனைவரும் வறுத்தெடுத்து வருகின்றனர். இதில் அதிகம் உருளுவது தோனியின் தலை தான்.
43 வயதில் அவர் IPL ஆடுவதை பலராலும் சகிக்க முடியவில்லை. இதனால் தான் அட்வைஸ் என்ற பெயரில் ஆளாளுக்கு தோனி ஒருவரே சென்னையின் தொடர் தோல்விகளுக்கு காரணம், என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.
அணி நிர்வாகம் தோனி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மீண்டும் கேப்டன் பதவியை அளித்துள்ளது. என்றாலும் 10 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால், சொந்த ரசிகர்களே சமூக வலைதளங்களில், CSKவை அடித்து துவைத்து காயப்போட்டு வருகின்றனர்.
என்றாலும் 2026ம் ஆண்டு 6வது IPL கோப்பையை வென்று தன்மீதான விமர்சனங்களுக்கு தோனி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையை சிதைக்கும் விதமாக, தோனி உடல்நிலை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தோனி குறித்து முன்னாள் சென்னை வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான அனிருதா ஸ்ரீகாந்த், ” எனக்கு கிடைத்த தகவலின்படி, தோனியின் முழங்கால் முற்றிலுமாக காயமடைந்துள்ளது. அவர் தனது அறையில் எழுந்து கதவு வரை நடப்பதற்கே சிரமப்படுகிறார்.
மிக நீண்ட நாட்களாக இருந்தால் வில்லனாகி விடுவோம் என்ற வாசகம் உள்ளது. அதுபோல நீண்ட நாட்கள் இருந்து தோனி அப்படி ஆகிக்கொண்டுள்ளார், ” என்று சமீபத்திய நேரலையில் பேசியிருக்கிறார்.
சென்னை அணியின் ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் தோனி மட்டுமே காரணமில்லை என்றாலும், உடல்நிலையை பொருட்படுத்தாமல் IPL தொடரில் அவர் நீடிப்பது, ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.