இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான மாற்றம்… வயது மோசடியை கட்டுப்படுத்துவதற்காக பிசிசிஐ, அதாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஜூனியர் கிரிக்கெட்டில் புதிய எலும்பு வயது சோதனையை கட்டாயமாக்கியுள்ளது.
எலும்பு வயது சோதனை என்பது ஒரு நபரின் எலும்புகள் முதிர்ச்சியடைந்திருக்கும் நிலையை மதிப்பிடுவதற்கான ஒரு முறையாகும்.
இது, சமீபத்தில் வைபவ் சூர்யவன்ஷி என்ற ஐபிஎல் வீரருக்கு எதிராக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து வந்தது. ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடும் இந்த இடது கை பேட்ஸ்மேன், 13 வயது 288 நாட்களில் ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற இளைய வீரராக பட்டம் பெற்றார். ஆனால், ஆரம்பத்தில் அவர் 15 வயதென சித்தரிக்கப்பட்டது பிரச்சனையை கிளப்பியது.
அவரது தந்தை தெரிவித்ததாவது, வைபவ் எட்டரை வயதிலேயே பிசிசிஐயின் எலும்பு பரிசோதனைக்கு சென்றவர். இந்திய யு-19 அணிக்காகவே அவர் ஏற்கனவே விளையாடியிருக்கிறார் என்றும், மீண்டும் பரிசோதனைக்குத் தயாராகவே உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், அவரது பிறந்த தேதி அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து மாறுபட்டு காணப்பட்டது. இதுதான் பிசிசிஐயை புதிய கட்டுப்பாடுகளை உருவாக்க வைக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
இதன் அடிப்படையில், 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் இப்போது இரண்டு முறை எலும்பு வயது சோதனையை எதிர்கொள்ள வேண்டும். ஆரம்ப சோதனையிலும், அதனைத் தொடர்ந்து சரிசெய்தல் நடைமுறையிலும் தகுதி கிடைக்காவிட்டால், அடுத்த சீசனில் மறுமதிப்பீடு நடத்தப்படும்.
பிசிசிஐ வட்டார தகவலின்படி, ஆண் வீரர்களுக்கு எலும்பு வயது 16.4 அல்லது அதற்கும் குறைவாகவும், பெண்களுக்கு 14.9 அல்லது அதற்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.
புதிய கணக்கீட்டு முறையின்படி, ஒரு 15.4 வயதுடைய வீரர், அடுத்த சீசனில் தானாகவே 16.4 என்று கருதப்படுவார். ஆனால் இது சில நேரங்களில் உண்மையான வயதைக் காட்டாமல், சிலரை ஒரு வருட தகுதியை இழக்கச் செய்யும் அபாயமும் உள்ளது.
எல்லோரும் சமமான நிலைமையில் போட்டியிட பிசிசிஐ எடுத்த இந்தக் கட்டாய நடவடிக்கை வரவேற்கத்தக்கது என சிலரும் கூறி வருகின்றார்.