மக்கள் தொகை கணக்கெடுப்பு! இதை மட்டும் செஞ்சா ரூ.1000 அபராதம்!

தமிழகத்தில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ள இந்தப் பணியில், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்க உள்ளனர். இவர்களுக்குத் துணையாக 19 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமான காகித முறையைத் தவிர்த்து, முதன்முறையாக மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இது தகவல்களின் துல்லியத்தை அதிகரிப்பதோடு, பணிகளை விரைவாக முடிக்கவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஜூலை மாத இறுதியில் இணையவழியில் சுயமாகத் தங்கள் விவரங்களைச் சமர்ப்பித்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், அதிகாரிகளின் வருகையின் போது தங்களது ‘சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை’ மட்டும் காண்பித்தால் போதுமானது. மற்றவர்கள், அதிகாரிகளின் 33 முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும். இதில் உங்கள் வீட்டின் கட்டமைப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், சமையல் எரிவாயு பயன்பாடு, இணையதள வசதி மற்றும் உங்களிடம் உள்ள டிவி, கார், மொபைல் போன் போன்ற சொத்துக்கள் குறித்த விவரங்கள் கேட்கப்படும். நீங்கள் அளிக்கும் அனைத்துத் தகவல்களும் 1948-ஆம் ஆண்டு சட்டத்தின்படி மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

இந்தக் கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தால், சட்டப்படி 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கணக்கெடுப்புப் பணியில் இருக்கும் அதிகாரிகள் உங்களை வற்புறுத்தினாலோ, வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் முறையற்ற கேள்விகளைக் கேட்டாலோ அல்லது ஆவணங்களைச் சேதப்படுத்தினாலோ, அவர்கள் மீது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை முறையாக வகுக்க இந்த மக்கள் தொகை தரவுகள் மிக அவசியமானவை. எனவே, உங்கள் வீட்டிற்கு வரும் அதிகாரிகளுக்குச் சரியான தகவல்களை வழங்கி, இந்த அரசுப் பணிக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Related News

Latest News