மாணவிக்கு கொடூர தாக்குதல்; கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்…மீஞ்சூரில் பரபரப்பு!!

மீஞ்சூர் அருகே இரவு வீட்டிமீஞ்சூர் அருகே இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் தாக்கிய கும்பல். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை..நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் வாலாஜா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், கொள்ளையடிக்க வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மாணவியை கண்டதும் பாலியல் இச்சையில் ஈடுபட முயன்ற மர்மகும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இந்த சூழலில், மர்ம கும்பலில் ஒருவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவி மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அமைதியான இடமாக இருந்த தங்களது குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை அதிகரித்து இருப்பதாகவும், கஞ்சா போதை ஆசாமிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மர்ம கும்பலில் ஒருவன் மட்டுமே பிடிபட்டுள்ளதாகவும் மற்ற இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிப்பதற்காக மட்டுமே மர்ம கும்பல் வந்ததா, வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News