கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL தொடர் நாளுக்குநாள், ஆலமரம் போல தழைத்தோங்கி செழிப்புடன் வளர்ந்து வருகிறது. இந்த 18 வருடங்களில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக IPL உருவெடுத்து விட்டது. இதற்கு இந்தியாவின் மக்கள் தொகையே முக்கிய காரணமாகும்.
ஆரம்பத்தில் 8 அணிகளுடன் தொடங்கப்பட்ட IPL தொடர், தற்போது 10 அணிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் மேலும் 2 அணிகள் இணையலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தநிலையில் நடப்பு IPL தொடரின் மூலம் BCCI ஈட்டிய, மொத்த வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
IPL போட்டிக்கான ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை முகேஷ் அம்பானியின் Viacom18 நிறுவனம் அளித்துள்ளது. அதாவது ஒரு போட்டிக்கான ஒளிபரப்பு உரிமை 130 கோடி ரூபாய். டைட்டில் ஸ்பான்ஸரான டாட்டா நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு மொத்தமாக, ரூபாய் 2500 கோடி ரூபாயை அளிக்கும்.
அதன்படி இந்த 2025ம் ஆண்டுக்கு டாட்டா நிறுவனம் ரூபாய் 500 கோடியை அளித்துள்ளது. லைசென்ஸ் உள்ளிட்ட விஷயங்களுக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களின் வருமானத்தில் இருந்து, BCCIக்கு 12.5 சதவீத வருமானத்தை அளிக்கின்றன. இதுதவிர விளம்பர நிறுவனங்கள், டிக்கெட் கட்டணம் என இந்தாண்டு பணமழையில் BCCI நனைந்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் என இதுவரை கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், பார்வையாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. பெங்களூரு – பஞ்சாப் போட்டியை Jio Hotstar ஆப்பில் மட்டும், 65 கோடிக்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.
ஆக மொத்தம் சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாயை, நடப்பு IPL தொடரின் வழியாக BCCI சம்பாதித்து இருப்பதாகத் தெரிகிறது. 2023 ஆம் ஆண்டு IPL தொடரினால் BCCIக்கு ரூபாய் 16 ஆயிரத்து 493 கோடி கிடைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த IPL சீசனில் BCCI 20 ஆயிரத்து 686 கோடி ரூபாய் வரை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், இந்த 18வது சீசனில் எக்கச்சக்க பணத்தை BCCI சம்பாதித்து இருக்கிறது. இவ்வளவு வருமானம் வருவதால் தான் ஏலத்தில் ஒவ்வொரு வீரர்கள் மீதும், அணிகள் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.