தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விலகினார். பாஜகவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ள அண்ணாமலை we the leader புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாகவும், வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த புது அவதாரம் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுக, தவெக, என அனைத்து கட்சிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகி உள்ளதால் அங்குள்ள அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதேபோல் அதிமுகவில் தற்போது முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகியும் விஜய்யின் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருந்தது. இதனை இந்த தேர்தலில் தவெக உடைத்த நிலையில் தற்போது அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அங்கு செல்வாக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் திமுகவில் உள்ள நிர்வாகிகள் தற்போதைய சட்டசபை தேர்தல் தோல்வியால் வருத்தத்தில் உள்ளனர். விஜய்யின் வெற்றியை அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் அண்ணாமலையின் அமைப்பில் இணையலாம். இது திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
அதேபோல் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மாற்றத்தை தேடிய பலரும் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். இதனால் விஜய் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டார். தமிழகத்தில் திமுக,அதிமுக என்ற 2 திராவிட கட்சிகளை தாண்டி இன்னொரு கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்ற பிம்பத்தை விஜய் இந்த தேர்தலில் உடைத்து அதிகமான இளைஞர்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். இதுதான் அண்ணாமலைக்கு பெரிய அளவில் உந்துதலை கொடுத்து, அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்க வழி வகுத்தது
அதுமட்டுமின்றி விஜய்க்கு இளைஞர்களிடம் செல்வாக்கு உள்ளதுபோல் அண்ணாமலைக்கும் இளைஞர்களிடம் செல்வாக்கு உள்ளது. இதனால் நிச்சயம் அண்ணாமலையின் அரசியல் வருகை தவெகவிற்கு பாதிப்பை தரலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர் .
