இந்திய கிரிக்கெட் உலகில் தற்போது ஒரு 15 வயது சிறுவனின் பெயர் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பேட்டரான வைபவ் சூர்யவன்ஷி, தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார்.
இந்த நிலையில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகவே இதனைத் தேர்வுக் குழுவினர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் துணை கேப்டன் பதவி, ஒரு கிரிக்கெட் வீரராக அவரது வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகப் பிசிசிஐ கருதுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியை வென்றது முதல், ஜிம்பாப்வே தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றது வரை வைபவின் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. ஐசிசி தரவரிசையில் கூட ஒரே அடியாக 230 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார் இந்த இளம் புயல்.
இருப்பினும், கிரிக்கெட் வல்லுநர்கள் இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறார்கள். வெறும் 15 வயதே ஆன ஒரு சிறுவன் மீது இவ்வளவு பெரிய பொறுப்பைச் சுமத்துவது, அவருடைய இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கரையே உதாரணமாகக் காட்டும் வல்லுநர்கள், உலகின் மிகச்சிறந்த பேட்டராக இருந்த சச்சினுக்கே கேப்டன்ஷிப் என்பது ஒரு கூடுதல் அழுத்தமாகவே இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோன்ற ஒரு அழுத்தத்தை வைபவ் மீது இப்போதே திணிப்பது அவருடைய எதிர்காலத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதே இவர்களது வாதமாக உள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி இப்போதுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். அவர் மீது தேவையில்லாத எதிர்பார்ப்புகளைச் சுமத்தாமல், ஒரு சிறுவனாக அவர் விளையாட்டை ரசித்து விளையாட அனுமதிக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.
பிசிசிஐ இவரை ஒரு எதிர்கால கேப்டனாக உருவாக்க நினைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிதானம் அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த அதிரடி முடிவு வைபவின் கேரியரை உயர்த்தப்போகிறதா அல்லது கூடுதல் சுமையாக மாறப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
