கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், தனது உரையை “என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்” எனத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சில வலிகளையும் காயங்களையும் மறக்க முடியாது என்றும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனது மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த சம்பவம் குறித்து பேசிய விஜய், கரூருக்கு வந்தபோது எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரண்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கலாம் என்றும், நிகழ்ச்சியை ரத்து செய்யும் முடிவை அதிகாரிகள் எடுத்திருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், காவல்துறையினர் தன்னை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்ற சூழ்நிலையை நம்பியதாகவும் தெரிவித்தார். அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தனது குடும்பத்தினரைப் போன்றவர்கள் என்றும், அவர்களின் இழப்பு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து அரசியல் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், கட்சி நிதி தொடர்பான விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் தன்னை விமர்சித்ததாக குற்றம்சாட்டினார். மேலும், அரசு நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு மரியாதையுடனும் நேர்மையுடனும் சேவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் நலனுக்காக தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், L&T நிறுவனம் ரூ.18,600 கோடி முதலீட்டில் செயல்படுத்தும் திட்டத்தின் மூலம் 8,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விஜய், வலியுடன் இருந்த தன்னைப் பற்றி தவறான கருத்துகள் கூறப்பட்டதாக தெரிவித்தார். மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே அரசியலுக்கு வந்ததாகவும், பணத்தை விட மக்கள் தான் தனக்கு முக்கியம் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
