அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைந்தனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த அனைவரும் கட்சி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றியபோது, இந்த இணைப்பு விழா ஒரு பெரிய மாநாட்டைப் போல அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இளைஞர்களை ஈர்க்கும் திறன் கொண்ட தலைவர்களாக ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்சி ஆனந்த் செயல்பட்டு வருவதாக அவர் பாராட்டினார்.
மேலும், முதலமைச்சர் விஜய் தற்போதைக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திலும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
துரோகம் செய்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தவர்கள் அல்ல; தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முயன்றவர்கள்தான் உண்மையான துரோகிகள் என்றும், எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்களே அதற்கு பொறுப்பானவர்கள் என்றும் விமர்சித்தார்.
நல்லவர்கள் அனைவரும் த.வெ.க.வில் இணைந்துள்ளதாகவும், தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியை இந்த இணைப்பு முறியடித்துள்ளதாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதா படத்தை வைத்திருக்க அனுமதி அளித்தவர் விஜய் என்றும், அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்கியபோது ஆதரவாக நின்றவர் விஜய்தான் என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
