இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு மிகப்பெரிய சட்ட மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
1952 மற்றும் 1995-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய விதிகளுக்குப் பதிலாக, இனி ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020’-இன் கீழ் ‘இபிஎஃப் 2026’ (EPF 2026) மற்றும் ‘இபிஎஸ் 2026’ (EPS 2026) என்ற புதிய திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் பிஎஃப் நிர்வாகத்தைச் சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய சட்டத்தின்படி, அரசுக்கு ஒரு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பெருந்தொற்றுகள் அல்லது இயற்கை பேரிடர்கள் போன்ற அவசர காலச் சூழல்களில், ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பைத் தற்காலிகமாகக் குறைப்பதற்கோ அல்லது மூன்று மாதங்கள் வரை ஒத்திவைப்பதற்கோ மத்திய அரசுக்கு இனி உரிமை உண்டு.
இது இக்கட்டான நேரங்களில் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒருவித நிதி நிவாரணத்தை அளிக்க வழிவகை செய்யும். மேலும், சொந்தமாக பிஎஃப் நிதியை நிர்வகிக்கும் தனியார் பிஎஃப் டிரஸ்டுகளுக்கு (Private PF Trusts) இனி மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கணக்கு தணிக்கை முதல் முதலீடுகள் வரை அனைத்தும் மின்னணு முறையில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ஊழியர்களுக்கு எவையெல்லாம் மாறாது என்பதும் இங்கு மிக முக்கியமானது. உங்களது அடிப்படைச் சம்பளத்திலிருந்து வழக்கமாகப் பிடிக்கப்படும் 12 சதவீத பிஎஃப் பங்களிப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், உங்கள் நிறுவனமும் தனது பங்காக 12 சதவீதத்தை வழக்கம் போலவே செலுத்தும்.
உங்களது நிரந்தர அடையாள எண்ணான யுஏஎன் (UAN) எண் மாறாது. பிஎஃப் கணக்கிலிருந்து முன் பணம் பெறுவது, வட்டி விகிதம் மற்றும் வாரிசுதாரர் நியமனம் போன்ற அடிப்படை உரிமைகள் அனைத்தும் அப்படியே தொடரும் என இபிஎஃப்ஓ (EPFO) நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இந்த மாற்றத்தின் அடிப்படை நோக்கமாகும். இனி பிஎஃப் தொடர்பான உரிமைகோரல்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே அதிவேகமாகச் செயல்படுத்தப்படும். நிர்வாக ரீதியான இந்த மாற்றங்களால் ஊழியர்களின் திரட்டப்பட்ட சேமிப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் சந்தாதாரர்கள் அச்சப்படத் தேவையில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், அவசர காலத் தேவைகளை முன்னிறுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ‘EPS 2026’ திட்டம், ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
