தெலுங்கானா மாநிலத்திலும் உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி வரும் ஜூன் 15 முதல் மதுபான விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஏற்கனவே கர்நாடகாவில் மதுபானம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது தெலுங்கானா மாநிலத்திலும் விலை உயர போவதாக தெரிகிறது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், 5 முக்கிய உத்தரவாதத் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் மதுபானங்கள் மீதான கலால் வரியை அடிக்கடி உயர்த்தி வருகிறது.
அந்த வகையில், நாட்டில் முதல் முறையாக மதுபான பாட்டில்களில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை அடிப்படையாகக் கொண்டு புதிய வரி விதிப்பு முறையை அம்மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்து, கடந்த மாதம் அதனை அரசாணையாக வெளியிட்டது.இதன் மூலம் மதுபானத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால் வரியும் அதிகமாக விதிக்கப்படும் என்பதால், சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் போன்ற இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை குவார்ட்டருக்கு 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கணிசமாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் மதுபான விலை உயர்த்தப்படுவது இது 5-வது முறை என்பதால் அம்மாநில மதுப்பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அம்மாநில மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
இந்த விலை உயர்வுக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.மதுபானம் தயாரிப்பதற்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலையானது சந்தையில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, மதுபானங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பானது தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மது நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
