ரஷ்யாவுக்கு ‘Free Pass’! மற்றவர்களுக்கு சிறை? ஈரான் அறிவிப்பால் வெறியான அமெரிக்கா!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ள ஈரான், தனக்கு நெருக்கமான ‘நட்பு நாடுகளுக்கு’ மட்டும் ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது. ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாகச் செல்லும்போது, அவற்றுக்கு எந்தவிதமான கட்டணமும் (Transit fee) வசூலிக்கப்படாது என்று ஈரான் அறிவித்துள்ளது.

இது அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையை உடைக்க ஈரான் எடுக்கும் ஒரு ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், மற்ற நாடுகளின் கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஈரான், பெர்மிட் இல்லாமல் வரும் கப்பல்களைப் பிடிப்பதையும் நிறுத்தவில்லை.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நடத்திய அதிரடி காட்சி ஒன்றை உலகம் பார்த்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரான் கமாண்டோக்கள் ஒரு அதிவேகப் படகில் வந்து, ‘எம்.எஸ்.சி பிரான்செஸ்கா’ (MSC Francesca) மற்றும் ‘எபமினோன்டாஸ்’ (Epaminondas) ஆகிய பிரம்மாண்ட சரக்குக் கப்பல்களைச் சினிமா பாணியில் முற்றுகையிட்டுச் சிறைபிடித்தனர்.

இந்தச் செயலை ஈரான் ஆக்ரோஷமாக உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. “நாங்கள் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலையும் அனுமதிக்க மாட்டோம்” என்பதுதான் ஈரானின் மிரட்டல். இந்த நிகழ்வுகளைப் பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மிகவும் அலட்சியமாக “இவை ஈரானின் சிறிய, மிரட்டும் விவேகமற்ற கப்பல்கள்” என்று குறிப்பிட்டாலும், அவரது எச்சரிக்கை மிகவும் கனமானது.

“தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வர விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர்கள் வரவில்லை என்றால், ராணுவ ரீதியாக நான் அதை முடித்துவிடுவேன்” என்று ட்ரம்ப் வெளிப்படையாகத் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானோ, அமெரிக்கா தனது முற்றுகையை நீக்கினால் மட்டுமே தாங்கள் ஜலசந்தியைத் திறப்போம் என்பதில் பிடிவாதமாக உள்ளது. பேச்சுவார்த்தை மேசைக்கும், போர்க்களத்திற்கும் இடையில் இருக்கும் இந்த மெல்லிய கோடு, எந்த நேரத்திலும் உடையலாம் என்ற பதற்றமான சூழல் நிலவுகிறது. உலகமே உற்றுநோக்கும் இந்த ஹோர்முஸ் விவகாரம், சர்வதேச வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

Related News

Latest News