பணவீக்கம் அதிகரிப்பு: பி.பி.எஃப்., செல்வமகள் திட்டங்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் வருமா?

மத்திய நிதி அமைச்சகம் மார்ச் 31, 2026 அன்று ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை அமலாக இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்களை அறிவிக்க உள்ளது. சமீபத்தில் பணவீக்கம் உயர்ந்து வருவதால், பிபிஎஃப் (PPF), செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (SSA), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

2024 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, இந்தச் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போதைய பொருளாதார சூழலில் பணவீக்கம் ஓரளவு உயர்ந்துள்ளது. பிப்ரவரி 2026 நிலவரப்படி, நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் 3.21 சதவீதமாக உள்ளது. இது கடந்த அக்டோபரில் இருந்த 0.25 சதவீதத்தை விட அதிகமானதாக இருந்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கிற்குள் தான் உள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் அரசுப் பத்திரங்களின் வருவாய் (G-Sec yields) முக்கிய பங்கு வகிக்கிறது. ஷியாமளா கோபிநாத் குழுவின் பரிந்துரைப்படி, முந்தைய காலாண்டில் அரசுப் பத்திரங்கள் பெற்ற வருவாயுடன் 25 முதல் 100 அடிப்படை புள்ளிகள் வரை கூடுதலாக சேர்த்து வட்டி நிர்ணயிக்க வேண்டும்.

உதாரணமாக, பிபிஎஃப் திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் சந்தை நிலவரப்படி கணக்கிட்டால், அது சுமார் 6.9 சதவீதத்திற்கு அருகில் தான் வருகிறது. இதனால் பரிந்துரைக்கப்பட்ட சூத்திரத்தை பின்பற்றினால் வட்டியை குறைக்க வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில் முதலீட்டாளர்களின் உண்மையான வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு வட்டியை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், அரசு வட்டியை குறைக்க தயங்கும் பல காரணங்களும் உள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் இந்தச் சேமிப்பு திட்டங்களையே நம்பி வாழ்கின்றனர். அவர்களின் வருமானத்தை பாதுகாக்க அரசு வட்டி விகிதத்தை குறைக்க விரும்புவதில்லை.

மேலும், குடும்பங்களின் சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் அரசு தேசிய சிறு சேமிப்பு நிதி (NSSF) வழியாக தனது கடன் தேவைகளை நிறைவேற்றுகிறது. தேர்தல் காலங்கள் அல்லது பொதுநல காரணங்களாலும், சந்தை நிலவரம் வட்டியை குறைக்க வேண்டும் எனக் கூறினாலும் அரசு பல நேரங்களில் வட்டியை மாற்றாமல் வைத்திருக்கிறது.

தற்போது பெரும்பாலான சிறு சேமிப்பு திட்டங்களுக்கு 7 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 3.21 சதவீத பணவீக்கத்தை ஒப்பிடுகையில், இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானமாகவே உள்ளது.

இதனால், நாளை வெளியாகும் அறிவிப்பில் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் வாய்ப்பே அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏதேனும் மாற்றம் இருந்தாலும், அது சில திட்டங்களுக்கு மட்டுமே குறைந்த அளவில் இருக்கலாம்.

அடுத்த மூன்று மாதங்களுக்கான முதலீட்டு திட்டங்களை முடிவு செய்ய இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருக்கும். வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா என்பதை அறிய இன்னும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளது.

Related News

Latest News