இந்தியாவில் 5G சேவைகள் இன்னும் முழுமையாக விரிவடைந்து வரும் நிலையில், மத்திய அரசு அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான 6G-ஐ நோக்கி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
‘பாரத் 6G விஷன்’ (Bharat 6G Vision) திட்டத்தின் ஒரு பகுதியாக, 104 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் ரூ.271 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவை உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயன்படுத்தப்படும் 5G நெட்வொர்க்கில் நொடிக்கு சுமார் 10 Gbps வரை இணைய வேகம் கிடைக்கிறது. ஆனால் வரவிருக்கும் 6G தொழில்நுட்பம் நொடிக்கு 1 டெராபிட் (1 Tbps) வரை வேகத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
இந்த திட்டங்களில் டெராஹெர்ட்ஸ் (THz) தகவல் தொடர்பு, மேம்பட்ட சிப்செட் வடிவமைப்பு மற்றும் சிக்னல் வலிமையை அதிகரிக்கும் ‘இன்டெலிஜென்ட் ரிஃப்ளெக்டிவ் சர்பேஸ்’ போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த திட்டங்களில் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு மற்றும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன.
6G தொழில்நுட்பம் வெறும் அதிவேக இணைய சேவையை மட்டுமல்லாமல் பல புதிய தொழில்நுட்ப மாற்றங்களையும் உருவாக்கும். ஹோலோகிராபிக் கம்யூனிகேஷன் மூலம் முப்பரிமாண உரையாடல்கள் சாத்தியமாகும். மேலும் தானியங்கி வாகனங்கள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளிலும் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்து இருக்காமல், இந்தியாவிலேயே 6G தொடர்பான காப்புரிமைகள் மற்றும் உபகரணங்களை உருவாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு 6G தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்யும் திறனை பெறும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
