அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
மத்திய கிழக்கில் கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வரும் போர்ப் பதற்றம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும்அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் காமெனி உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ஈரான் கடுமையான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை மேற்கொண்டது.
அமேசான் தரவு மையம் சேதம் – வங்கி சேவைகள் பாதிப்பு
ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில், Amazon Web Services (AWS) நிறுவனத்தின் தரவு மையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்களும், பஹ்ரைனில் உள்ள ஒரு மையமும் தாக்குதலால் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வங்கி சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பல முக்கிய செயலிகள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.
உலகளவில் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை, உலகளாவிய நிதி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கிளவுட் சேவைகள் மற்றும் வங்கி அமைப்புகள் மீது தாக்கம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்தால், உலக பொருளாதாரத்திலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
