தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பீமேஸ்வர் (வயது 32). இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களுக்கு கூறி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பீமேஸ்வரை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியின் குளத்தில் பீமேஸ்வர் பிணமாக மிதந்துள்ளார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் ஊழியர்கள் பிணத்தை பிண அறையில் வைத்து பரிசோதனைக்கு தயாரித்திருந்தபோது, அப்போது பிணவறையில் புகுந்த நாய் ஒன்று பீமேஸ்வர் பிணத்தை கடித்து சாப்பிட்டுள்ளது.
இதைக் கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் இரவு முழுவதும் பீமேஸ்வர் பிணத்தை ஆம்புலன்ஸில் வைத்திருந்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களுக்கு ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
