இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம், பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி பிக்-அப் டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்திற்கு தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய ஏற்றுமதி ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்த ஆர்டரை வழங்கியுள்ள நிறுவனம் அக்ரினாஸ் பங்கன் நுசாந்த்ரா (Agrinas Pangan Nusantara) ஆகும். இது இந்தோனேசியா அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம், மொத்தம் 35,000 மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகளை வாங்குவதற்காக மஹிந்திராவிற்கு ஆர்டர் வழங்கியுள்ளது.
KDKMP (Koperasi Desa / Kelurahan Merah Putih) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்த ஆர்டருக்காகவே இந்த 35,000 பிக்-அப் டிரக்குகள் வாங்கப்படுவதாக மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 35,000 மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்-அப் டிரக்குகளும் 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் வரலாற்றிலேயே இதுதான் இதுவரை கிடைத்த மிகப்பெரிய ஏற்றுமதி ஆர்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2024–25 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் ஏற்றுமதி செய்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஒரே ஒரு ஆர்டர் மூலமாக ஏற்றுமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.
