தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தை கடந்த 8-ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தினமும் சுமார் 300 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பரிசு பெற்றுள்ள நிலையில், பலர் சொந்த ஊருக்கு சென்றதால், அவர்களால் பொங்கல் பரிசு வாங்க முடியவில்லை. எனவே, அவர்கள் ஊருக்குத் திரும்பியதும் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு ஓரிரு நாளில் வெளியிட இருக்கிறது.
