பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவு அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில், “கிரீன்லாந்தில் வசிக்கும் மக்களுக்கே அந்த தீவு சொந்தம். இதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க், கிரீன்லாந்து மட்டுமே முடிவு செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்திருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது : கிரீன்லாந்து தீவில் சுமார் 57,000 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் டாலர் (ரூ.90 லட்சம்) வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பார்கள். எந்த வகையிலாவது கிரீன்லாந்து தீவை விலை கொடுத்து வாங்குவோம். இல்லையென்றால் ராஜ்ஜியரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்போம். தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டாம் உலகப்போரின்போதே கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க முயற்சி செய்தது. அதற்கு டென்மார்க் சம்மதம் தெரிவிக்க வில்லை. தற்போது அதிபர் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக பறிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
