Friday, December 26, 2025

பராசக்தி படத்திற்கு அடுத்த சிக்கல்., தடை செய்யக்கோரி வழக்கு

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது “செம்மொழி” என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News