பெரியாரின் 52-வது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
“வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!
தமிழர்கள் தலைகுனியாமல் – ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் – பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
