மதுரையில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், மதுரை – தொண்டி சாலையில், மேலமடை – அண்ணாநகர் சந்திப்பில் 150 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
1 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 17.20 மீட்டர் அகலமும் கொண்ட இந்த புதிய பாலத்திற்கு 2023ஆம் ஆண்டு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலத்தின் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீரமங்கை வேலுநாச்சியர் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில், தமிழர்களின் பண்பாடுகளை எடுத்துகாட்டும் வகையில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஜல்லிக்காட்டை பறைசாற்றும் வகையில், பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள ஏறுதழுவுதல் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
69 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோரிபாளையம் பந்தல்குடி கால்வாயின் பக்கவாட்டில் சுவர் அமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டார்.
