அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் நேற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் செங்கோட்டையன் இன்று காலை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக தலைவர் விஜய் கட்சி துண்டை போத்தி வரவேற்பு அளித்தார்.மேலும் அவருக்கு தவெகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவில் இல்லை.. அதனால் அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.. நன்றி வணக்கம்” என்று பதிலளித்து சென்றார்.
