மேற்கு வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை ஊற்றி சமைத்த உணவை சாப்பிட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், அதாவது 2 குழந்தை 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, கடுமையான வயிற்று வலி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனே 6 பேரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அமிலம் கலந்த உணவை உட்கொண்டதே பாதிப்புக்கான காரணம் என மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை அளித்ததாக தெரிகிறது.
குடும்பத்தினரின் உடல்நிலை மோசமடையை கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். தற்போது அங்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர், செம்பு மற்றும் வெள்ளி வேலைகளில் ஈடுபடுபவர் என்பதால் வீட்டில் அமிலத்தை வைத்திருக்கிறார். தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம் போன்ற மற்றொரு பாத்திரத்தில் அமிலம் வைக்கப்பட்டிருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை, வீட்டிற்கு வந்த உறவினர் தண்ணீர் என நினைத்து அமிலத்தை ஊற்றி சமைத்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தான பொருட்களை எச்சரிக்கையாக வைத்திருக்குமாறு அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த செயல் தவறுதலாக நடந்ததா? அல்லது , திட்டமிட்ட சதியா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
