மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இதனையடுத்து 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரும் என்று தெரிகிறது.
நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி அளவில் வலுவிழந்தது. இதனிடையே இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், அதில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
