மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்த மாணவிக்கு, கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வாலிபர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். முதலில் இருவரும் செல்போனில் நட்பாக பேசி வந்த நிலையில், இவர்களுக்கிடையே நாளடைவில் பழக்கம் காதலர்களாக மாறியுள்ளது.
அதன்பிறகு 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது. வார விடுமுறை நாட்களில் 2 பேரும் வெளியில் எங்காவது சென்று நேரத்தை செலவிடுவது வழக்கமான ஒன்றாக சொல்லப்படுகிறது.
இதனை போலவே ஞாயிற்றுக்கிழமை {02.11.2025} விடுமுறை நாளான நேற்று இரவு கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சந்தித்துக் கொண்டனர். காதலன், காரில் வந்துள்ளார், அந்த காரில் கல்லூரி மாணவி ஏறிக்கொள்ள கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு 11 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு 2 பேரும் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு மர்மநபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி காரை நோக்கி சென்றதாக சொல்லப்படுகிறது. காரின் கதவை தட்டி உள்ளே இருந்த 2 பேரையும் மிரட்டியதாகவும், இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபடியே காரில் இருந்த காதலனை வெளியே இழுத்ததாகவும் கூறப்படுகிறது. கல்லூரி மாணவியின் கண் முன்பே அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பலத்த காயம் அடைந்த காதலன் மயங்கி விழுந்துள்ளர்.
அதன் பின்னர் 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் மாணவியை, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்குள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே புதருக்குள் தூக்கிச் சென்று 3 பேரும், மாணவியை ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்தகாத தெரிகிறது.
மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடியதால்,ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரையும் தாக்கி கொடூரச் செயலை அரங்கேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதற்கிடையே மயக்கம் தெளிந்த காதலன், செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ச்சுன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர், அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை அவர்கள் தேடினர். சுமார் 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த மாணவி, தண்டவாளம் அருகே உள்ள புதருக்குள் ஆடைகள் களைந்தநிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வன்கொடுமை செய்த 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் இரவு விடிய, விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மட்டும் அந்த பகுதியில் கிடந்துள்ளது. அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரித்தபோது அது திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இந்த் நிலையில் , தப்பியோடிய கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் யார், அவர்கள் மாணவர்களா அல்லது வேறு யாருமா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
மேலும், 3 பேரும் கடும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
