பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான கருத்து மோதல் இன்னும் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் எந்தவித பதிலும் அளிக்காததால், அவரை கட்சியின் செயல்தலைவர் பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் தர்மபுரியில் ராமதாஸ் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ம.க. செயல்தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். கட்சிக்கும், தனக்கும் பாதுகாப்பாக காந்திமதி இருப்பார் என ராமதாஸ் தெரிவித்தார்.
