சென்னை ராமாபுரம், பெரியார் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் நாகராஜன் (43) என்பவர் பாரதி சாலை சந்திப்பில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி இரவு கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிபன் சாப்பிட்டுவிட்டு பணம் தாராமல் சென்றார்.
நாகராஜன் அவரிடம் பணம் கேட்டதற்கு “தன்னிடமே பணம் கேட்கிறாயா” என்று கூறி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அத்துடன் நாகராஜன் வைத்திருந்த பணம் ரூபாய் 500ஐ பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.
இது குறித்து நாகராஜன் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட சின்னப்போரூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 200 பணம் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தனசேகர் மீது செயின் பறிப்பு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
