காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 16) என்ற மாணவன் குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வெங்கடேசன் அதிகளவில் செல்போன் பயன்படுத்தியதாகவும் பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
