கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இது தொடர்பாக கரூர் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது FIR பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைதான நிலையில்,மேலும் ஒரு நிர்வாகி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் தெற்கு நகரப் பொருளாளர் பவுன்ராஜை, நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.