மதுரை அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியைச் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் மகன் கெளதம். இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பியபோது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சேடப்பட்டி போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
