கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா (35). இவருடைய அக்கா மகளுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையையும், தாயையும் கவனிப்பதற்காக, ரேஷ்மா மருத்துவமனையில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை ரேஷ்மாவுக்கு கால் வலி ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் வலி நிவாரண ஊசி போட்டு கொண்டார். இதையடுத்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார், ரேஷ்மாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
