அண்டை நாடான நேபாளத்தில், சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும்வகையில், ‘ஜென் சி’ என்ற குழுவை தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில் பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்பட 26 சமூக வலைத்தளங்கள் மீது நேபாள அரசு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உள்துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
பக்தபூரில் உள்ள பால்கோட்டில் பிரதமர் சர்மா ஒலியின் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை நேபாள ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அங்கு விமானசேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமையைப் பயன்படுத்தி, வன்முறைக் கும்பல்கள் வணிக வளாகங்களுக்குள் புகுந்து, டிவி, ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள ராணுவம் எச்சரித்துள்ளது.
