அதிமுக வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ‘கெடு’ விதித்தார்.
இதையடுத்து இதையடுத்து செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என்று சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் தங்களுடைய கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அ.தி.மு.க.வினர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. பழைய வலிமையை பெறவேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்றுதான் செங்கோட்டையன் கூறுகிறார்.
அதற்காக அவருடைய கட்சி பதவிகளை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்களுடைய பதவியை ராஜினாமா செய்கிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் பதவியில் நீடிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.